
நேத்து நம்ம அறிக்கையை கலைஞர் படிச்சிருப்பாரோ என்னவோ,இன்னிக்கு அவர் எழுதியிருக்கிற கேள்வி-பதில் அறிக்கை ரொம்பவே சூடாக சுவையாக இருக்கிறது. கலைஞரிடம் இருந்து வரும் மொக்கை அறிக்கைகள்,மொக்கை கடிதங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் இது போன்ற ரசனையான அறிக்கைகளும் வெளியாகும். அந்த வகையில் கலைஞர் இன்று வெளியிட்டுள்ள கரம் மசாலா அறிக்கை.
கேள்வி: இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது தமிழக முதல்-அமைச்சரும் அந்த பிரச்சினையை கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?
பதில்: இறையாண்மையைக் காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ நானும் சரி- என் தலைமையிலே உள்ள தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை. டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கை பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள- காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள சேனாதிபதிகள் சமீப காலமாக முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா? இவைகளைப் பற்றித்தான் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் அல்லும், பகலும் ஆராய்ச்சி செய்து- அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அலையில் நம்மைப் பார்த்து இலங்கை தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.
அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.
எச்சரிக்கை: அவர் தவறிப்போய் 2002-ம் ஆண்டு சட்டமன்றத்திலே முதல்-அமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம்- தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவோமென்று- அதை நினைத்து ராஜபக்சேவுக்கு பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: மேடையேறி இலங்கை தமிழர்களைப் பற்றி பேசினால் இந்த அரசு அவர்களை கைது செய்து விடுகிறது என்று ஒரு பிரசாரம் நடைபெறுகிறதே?
பதில்:காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும் - இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.
கேள்வி: அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில் தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்-அமைச்சரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?
பதில்: அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்தில்- தம்பி பரிதி இளம்வழுதி இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு கவனஈர்ப்பு தீர்மானத்தை அவையிலே எழுப்ப முனைந்தபோது- அதற்கு அனுமதி மறுத்து அ.தி.மு.க. அரசின் சார்பில் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா- இலங்கை பிரச்சினையிலே இந்தியா தலையிட முடியாது- அது ஒரு அயல் நாட்டு பிரச்சினை என்று பேசி அது இன்றும் நடவடிக்கை குறிப்பிலே இருக்கிறதே, அதை டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விடலாமா? என்று கூறியுள்ளார்.
தேர்தல் பயிற்சிகளில் (?) முழுமூச்சாய் ஈடுபட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு இந்த கடிதம் மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.
கடைசியா ஒரு சந்தேகம் தலீவரே: இந்த அறிக்கையில் கல்லத்தோணி,சேனாதிபதிகள் போன்ற “கீவேர்ட்ஸ்” வைக்கோவையும் சேர்த்துத் தானே குறிக்கிறது தலீவரே?
தென்னமரத்துல தேள் கடிச்சா பன மரத்துல நெரிகட்டிச்சாம்