ஞாயிறு, 10 மே, 2009

ஞாயிறு அதிரடி :"வாக்காளர்களுக்கு சில யோசனைகள்"

வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் வாக்காளப்பெருங்குடி மக்களே! உங்களுக்கு சில‌ உபயோகமான யோசனைகள் இதோ. இந்த யோசனைகளில் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல‌, கடும் பணியாற்றிவிட்டு ஓட்டுப்போட மற்றும் போடவைக்கக் காத்திருக்கும் கட்சித்தொண்டர்களுக்கும் உரிய யோசனைகளும் கலந்திருக்கிறது. எனவே பிரித்துப் புரிந்துகொள்ளுங்கள்.

யோசனை 1: இதுவரை ஓட்டுகேட்டு உங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய பிட் நோட்டீஸ்கள் எச்சக்சக்கமாக சேர்ந்திருக்கும்.அந்த வாக்குறுதிகள் எல்லாம் டுபாகூர் தான் என்றாலும் அது பற்றி நமக்கு கவலை இல்லை. அந்த நோட்டீஸ்களைச் சேர்ந்து வைத்தால் வீட்டில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு கணக்கு போட்டுப்பார்க்க,வீட்டுக் கண்ணாடிகள் துடைக்க,பெருக்கிய குப்பைகளை பார்சல் பண்ணி நைசாக ரோட்டில் வீச, அடுப்பிலிருந்து பால்பாத்திரம் இறக்க என உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அதைத் தவிர வேறு எதற்குமே அது வேலைக்காவாது. 

யோசனை 2: தேர்தலுக்கு முதல் நாள் இரவு தான் மிக முக்கியமான நாள் ஆகும். அந்த இரவில் தான் பணம் கொடுத்துவிட்டு பாலில் சத்தியம் வாங்குவார்கள். இருட்டுக்குள் இந்த வேலை நடப்பதால் இந்த நேரத்தைப் பயன்படுத்தி டூப்ளிகேட் நோட்டுக்களை தள்ளிவிட முயல்வார்கள். நீங்கள் உசாராக ஊதா நிற லேசர் லைட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டால் கள்ள நோட்டை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். மற்றபடி பால் சத்தியத்தைப் பற்றி கவலைப் படவேண்டாம். கடவுளையே கடத்துகிற காலமிது. அது மட்டுமின்றி இப்போது வருவதெல்லாம் கலப்பட பால் என்பதால் தைரியமாக உங்களுக்குத் தான் ஓட்டுப்போடுவேன் என்று சத்தியம் பண்ணலாம்.

யோசனை 3: ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களை போட்டோ எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. காரணம் எலக்சன் முடிந்து விட்டால் அவர்களை நீங்கள் கணவில் கூட பார்க்க முடியாது. எலக்சன் முடிந்து வெற்றிபெற்ற வேட்பாளர் திரும்ப உங்கள் தொகுதிக்கு வராவிட்டால் பத்திரிக்கை டிவிகளில் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்கலாம். அதைப்பார்த்து பதறியடித்து ஓடி வருவார்கள். 

யோசனை 4: எலக்சன் காலையில் உங்களை ஓட்டுப்பொடுவதற்காக ஆட்டோ வைத்து அழைத்துச்செல்வார்கள். ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தவுடன், ஆட்டோவெல்லாம் ஒன்வே தான், அதனால‌  இப்டியே பொடி நடயா நடந்து போயிடுங்க என்பார்கள். எனவே முன் ஜாக்கிரதையாக முதலிலேயே ஆட்டோ ரிட்டன் சார்ஜை  வாங்கிக்கொண்டு பிறகு ஆட்டோவில் ஏறுவது நலம். 

யோசனை 5: கிராமத்து வாக்காளர்கள் இன்னேரம் கோடை பயிரிட தயாராகிகொண்டு இருப்பீர்கள். உழவுக்காக அவசரப்பட்டு வாடகைக்கு டிராக்டர் சொல்லி காசை வீணாக்க வேண்டாம். காரணம் உங்களிடம் வாக்குகேட்பவர்கள் நிச்சயமாக "எனக்கு ஓட்டுபோடுங்கள் உங்களுக்கு மாடாய் உழைப்பேன்" என்று வருவார்கள். அவர்களில் இருவரைப் பிடித்து ஏரில் கட்டி உழுது விடலாம். வேலை முடிந்தவுடன் அவர்களுக்கு நீங்கள் தண்ணி காட்டி விடக்கூடாது. நிஜமாய் அவர்களுக்குத் தான் ஓட்டுப்போட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு செய்த பாவம் உங்களுக்கு கொம்பு முளைத்துவிடும் ஜாக்கிரதை. 

யோசனை 6: கள்ள ஓட்டுபோடும் வாக்களார்கள் பத்து விரல்களிலும் எலுமிச்சை பழத்தை சொருகிக்கொண்டு தேர்தல் பூத்திற்குச் செல்லவும்.விரலில் மைவைக்க வந்தால் ஹி..,ஹி..,நகச்சுத்தி எனக்கூறிவிட்டு ஓட்டுப்போடலாம். ஆனால் அடுத்த ஓட்டுப்போட அடுத்த பூத்திற்குச் சென்று விடவேண்டும். ஒரே பூத்தில் உங்கள் வேலையை காட்டினால் அப்பறம் அடுத்த கையெழுத்துப் போட காவல் நிலையத்திற்குத்தான் போகவேண்டி வரும். 

யோசனை 7: விரலில் மைவைக்க வரும் போது விரல்களை மடக்கி குஷ்ட வியாதி போல கையைக் காட்டினால் அந்த அதிகாரி உங்கள் மேல் பரிதாபப்பட்டு விரல்களில் மைவைக்க மாட்டார். இதே டிரிக்கை வேறு வேறு பூத்களில் பயன்படுத்தி ஓட்டுக்களை  குத்தி குமுறி விடலாம். 

யோசனை 8: சிட்டிசன் பட அஜீத் மாதிரி ஒவ்வொரு கெட்டப்பாக போட்டுக்கொண்டு சென்று ஒவ்வொரு பூத்தாக போய் ஓட்டுப்போடலாம். அவசரப் பட்டு இந்தியன் கமல் கெட்டப்போட்டுக் கொண்டு சென்றால் உங்களை கெடா சட்டத்திலே புடித்து உள்ளே தள்ளிவிடுவார்கள் ஜாக்கிரதை. 

BULK ஓட்டுப் போடுவோரின் கவணத்திற்கு:

யோசனை 9: ஓட்டுக்கு காசுவாங்கியவர் உங்க கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவார் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால், அவருக்கு ஒரு கருப்புக்கண்ணாடியை மாட்டி அவரை அழைத்துச்சென்று கண்தெரியாதவர் என்று கூறி அவரது ஓட்டினை சிந்தாமல் சிதறாமல் உங்கள் தலைவரின் சின்னத்திலே குத்திவிடலாம்.வேலை முடிந்ததும் வழக்கம் போல அவரை அங்கேயே கழற்றிவிட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடாமல் ஒழுங்காக அதேபோல அழைத்து வந்து வெளியே விட்டுவிடவும். இல்லாவிட்டால் அவர் கண்ணாடியைக் கழட்டிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்து விடுவார். தகவல் அறிந்து காவல்துறையினர் உங்களைக் கழற்றிவிடுவார்கள் ஜாக்கிரதை. 

யோசனை 10: தேர்தல் பூத்தின் அருகேயுள்ள டீக்கடைகளிலிருந்தான் எப்படியும் தேர்தல் அதிகாரிகளுக்கு டீ செல்லும். அந்தக் கடைப் பாலில் நைசாக ஒரு பேதி மாத்திரையைக் கலந்துவிட்டால் எலக்சன் ஆபிஸர்கள் மட்டுமின்றி அங்கு டீ குடிக்கும் உங்கள் எதிர்பார்ட்டிகளும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி உங்கள் தலைவருக்கு பல்க் ஓட்டுக்களை குத்து குத்து என குத்தி தீர்த்துவிடலாம். ஆர்வக்கோளாறில் பட்டியலில் உள்ளதை விட அதிகமாக குத்திவிடப்போகிறீர்கள்,அதுமட்டுமின்றி மறதியாக அதே கடையில் நீங்களும் டீ குடித்துவிடப் போகிறீர்கள். ஜாக்கிரதை. 

யோசனை 11: கொசு மருந்து அடிக்கும் ஊழியரைக் கரெக்ட் பண்ணிக் கொன்டு அதிலே குலோரோஃபாமினைக் கலந்து விடவும். பன்றிக் காய்ச்சல் கிருமிகளுக்கு மருந்து அடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எலக்சன் பூத்துக்குள் மருந்தை அடித்தால் காவல்துறை உட்பட தேர்தல் அதிகாரிகளும் மயங்கிவிடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்கள் தலைவருக்கு பல்க் ஓட்டுக்களை குமுறிவிடலாம். மருந்தடிக்கும் நேரத்தில் உங்கள் குழுவினர் பெப்பரெப்பேன்னு பராக்கு பார்த்துக் கொண்டிருந்தால் அப்பறம் அவர்களும் மயங்கிவிடுவார்கள். கவணமாக துணியை வைத்து மூக்கினைப் பொத்திக்கொண்டு வேலையப் பார்க்கவும். 

யோசனை 12: சிம்பிலாக நைட்ரஸ் ஆக்ஸைடை(சிரிப்பூட்டும் வாயு) ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்று வரிசையில் நிற்கவும். உங்கள் முறை வந்ததும் அதை ஓப்பன் செய்து உள்ளே உருட்டி விடவும். அதன் மூலம் தன்னை மறந்து அதிகாரிகள் சிரித்துக்கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்து ஊடு கட்டிவிடலாம். 

பின்குறிப்பு: இது வெறும் நகைச்சுவையேயன்றி யாரும் செய்துபார்த்து சிக்கி சின்னாபின்னமாகிவிட வேண்டாம்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யோசனை எல்லாம் செம டெரரா இருக்கே

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

அம்மாடியோவ் !!! இஃகி இஃகி இஃகி இஃகி. முடியல கபாலி. இந்த பதிவ படிச்சதும் 10 சிலிண்டர் நைட்ரஸ் ஆக்ஸைடு II வை ஒரே நேரத்தில் சுவாசித்த மாதிரி அப்படி ஒரு கட்டுப்படுத்த முடியாத அளவு சிரிப்பு எனக்கு. சிரிப்பை நிறுத்தி விட்டு நான் விஷயத்திற்கு வருகிறேன்.


இது தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எதிர்காலத்தை பற்றியது. நீங்கள் அப்படியே இந்த ஒன்றுக்கும் உதவாத 49-O ல ஓட்டு போட்டு யாருக்குமே உதவாக்கரையா போறது எப்படி என்று ஒரு காட்டு காட்டி இருக்கலாம். 49-O ல ஓட்டு
போடுறது என்பது எரியற கொள்ளிக்கட்டையால தலை செரியறது, சொந்த செலவில சூனியம் வைத்து கொள்வது, சும்மா இருக்கிற சனியனை பிடித்து பனியனுக்குள் விடுவது போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு சமம்.

49-O ஓட்டு போட்ட மறு கணமே நீங்கள் அந்த பகுதியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் வேண்டாத நபராக ஆகிவிடுவீர்கள். 49-O வை ரகசியமாக பதிய இயலாது. பிறகு எந்த ஒரு விஷயத்திற்கும் உள்ளூரில் எந்த அரசியல்வாதியின் உதவியையும் எதற்கும் பெற முடியாது. நீங்கள் தான் வாக்கு சாவடியில் பகிரங்கமாக எவனும் சரியில்லை என சொல்லி விட்டீர்களோ ! அவர்களிடம் ஏதாவது உதவிக்கு போனால் என்ன மசுருக்கு இங்கே வந்தே? என கேட்பார்கள். அதுக்கு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மா வீட்டில் இருக்கலாம்.

உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டாக கருதப்படாது. வெறும் பதிவு தான் அது. உங்களின் வாக்கை 49-O வாக பதிந்து விட்டால் பிறகு உங்களின் பெயரை பயன்படுத்தி யாரும் கள்ள ஓட்டு போட இயலாது. அதற்கு தான் 49-O ஏற்பாடு. இது எந்த வகையிலும் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சுத்தப்படுத்த உதவாது.


இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது.

உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் 90 (தொன்னூறு)
வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுவிடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது. நம்மையே இந்த கொடுமையிலிருந்து காப்பற்றி கொள்ள இயலாத போது சத்தியம் alias நியாயம் alias தர்மத்தை எப்படி காப்பற்ற இயலும்.


மேல் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/49-O


இதற்காகவாவது இந்த பதிவுக்கு தமிழ்மணத்துல "பல்க் ஓட்டு" போட்டு நெம்பர் ஒன் ஆக்கனும். இதுக்கு 100 "பல்க் ஓட்டு" போடுறது தப்பே இல்லை. நாலு பேருக்கு இது விளங்கனும்ன, எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. வேற என்னத்தை சொல்ல? கையலாகாத நிலையை நினைத்து வெறுப்பாக வருகிறது.



with care and love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Karthikeyan G சொன்னது…

//யோசனை 6: கள்ள ஓட்டுபோடும் வாக்களார்கள் பத்து விரல்களிலும் எலுமிச்சை பழத்தை சொருகிக்கொண்டு தேர்தல் பூத்திற்குச் செல்லவும்.விரலில் மைவைக்க வந்தால் ஹி..,ஹி..,நகச்சுத்தி எனக்கூறிவிட்டு ஓட்டுப்போடலாம். ஆனால் அடுத்த ஓட்டுப்போட அடுத்த பூத்திற்குச் சென்று விடவேண்டும். ஒரே பூத்தில் உங்கள் வேலையை காட்டினால் அப்பறம் அடுத்த கையெழுத்துப் போட காவல் நிலையத்திற்குத்தான் போகவேண்டி வரும்.

//

மை பூசும் விரலில் லேசாக மண்ணெண்ணெய்/ தே.என்னை பூசி செல்லலாம்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Muhammad Ismail .H, PHD,//

நன்றி இஸ்மாயில் சார். பதிவைவிட பெரிய்ய்ய கமெண்டு போட்டதற்கு.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// தமிழ்நெஞ்சம் //

பார்த்தேன் ரசித்தேன். நன்றி தமிழ் நெஞ்சத்திற்கு

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G//

அட! குழந்தையா இருந்த கார்த்தி திடீரென வாலிபனா மாறிட்டாரே. விட்டலாச்சாரியா படம்மாதிரி. அந்த யோசனய நீங்க வேனுமினா செஞ்சிபாத்து 4 அடிய வாங்குங்க.