ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

அம்பி யார்? அந்நியன் பாணியில் கலைஞர் அறிக்கை

தலைவர் கலைஞருக்கு பொழுதுபோகலண்ணா ஒரு அறிக்கைவிடுவார், மனசுக்கு கஷ்டமா இருந்தா கடிதம் எழுதுவார். யாராவது அவர சீண்டுனா அவங்க வண்டவாளத்த தண்டவாளம் ஏற்றிவிடுவார். அதுக்கென்று ஒரு தனி மெத்தட் வச்சியிருக்கார். அதுதான் கேள்வி-பதில் அறிக்கை. 

அது என்னடா கேள்வி-பதில் அறிக்கை அப்டின்னா அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லுவார். இது எப்டி இருக்குன்னா பரீட்சை எழுதும் பள்ளிக்கூட மாணவனுக்கு கொஸ்டீன் பேப்பரையும் கொடுத்து கூடவே கோணார் நோட்ஸையும் கொடுத்த கதயா இருக்கு. 

இப்ப இன்னா மேட்டருன்னா நம்ம கம்மினியூஸ்டு தலீவரு தாவன்னா.பாண்டியன் இருக்காருல்ல அவரு ஒரு அறிக்கை விட்டிருந்தாரு.,அதில இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் மக்களுக்குத் தெளிவுபடுத்த  வேணுமுனு கேட்டு இருந்தார். அதக்கேட்டு கொதித்த தலைவர் கலைஞர் உடனே ஒரு கேள்வி-பதிலை போட்டுவிட்டார். சும்மா வெறுமனே தாவன்னாவ மட்டும் ஓட்டுனா அறிக்கை சூடா இருக்காதுன்னு அவரு கூட இலவச இணைப்பா  தலைவர் கலைஞரின் அன்புத்தம்பி வைக்கோ,அம்மாவின் அன்பு சகோதரர் மருத்துவரு இடிதாங்கி அய்யாவையும் இணைச்சி வச்சி இருக்கிட்டாரு. 

முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை: 

கேள்வி: மதிமுகவிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றும், அவர்களை நிர்மூலமாக்க நினைத்தவர் அழிந்து போவர் என்றும், மதிமுக எங்கே இருக்கிறது என்று கேட்டவர் இன்று நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றனர் என்றும் வைகோ பேசியிருக்கிறாரே?. 

பதில்: "நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்'' என்று கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். அவர் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன பொருள் என்று புரியவில்லையா? அவர் 5 இடம் கேட்டபோது, மதிமுக எங்கேயிருக்கிறது என்று கேட்கப்பட்டதாம். பின்னர் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது, அவர்களைப் பார்த்து பயந்து கொண்டு ஒதுக்கியிருக்கிறார் என்பதை ஜாடையாகக் குறிப்பிட்டுத்தான் அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள். 

கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே? 

பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!. 

கேள்வி:- இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே? 

பதில்: அவருடைய முக்கியமான குறிக்கோளே நாம் ஆட்சியிலே இருக்கக் கூடாது என்பது தான். கடைசி வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே கூட்டணி என்றும் ஆசை வார்த்தை கூறி, அந்தக் கட்சியை அதிமுகவின் பக்கம் கொண்டுபோக படாதபாடுபட்டு, அதற்காகவே ஜெயலலிதாவை விட்டு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடவும் செய்து, காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலையினால் ஏமாற்றம் கண்டவர் தற்போதும் ஏன் ஆட்சியை இழக்கக் கூடாது என்கிறார். 

பதவி விலகுவதிலே எவ்வளவு அக்கறையாக உள்ள டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே மந்திரியாக இருந்த காலத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையிலே மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல'' என்று இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்! 

என ஒரு கே.ப‌ (கேள்வி-பதில்)அறிக்கயை விட்டு தலைவரின் வாயைப் புடிங்கி சுகம் காண நினைத்தவர்களை வரிந்து கட்டிக்கொண்டு வட்டியும் முதலுமாக வாரிக்கொட்டி விட்டார். கேள்வி கேட்டவர்கள் எங்கே போயி முட்டிக் கொள்வார்களோ!!!! 

ஞாயிறு அதிரடி: "கோடையைச் சமாளிக்க சில குளு குளு ஐடியாக்கள்"

நாளை படிக்கத் தவறாதீர்கள்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?. //

முரசொலி மாறன் ஆஸ்பத்திரி பில்லை செட்டில் பண்ணும் வரை ஆதரவு கொடுத்து பின் அப்படியே காங்கிரசில் சேர்ந்த தன்னை பற்றியே கூறுகிறாரா /?

வயசாயிடுச்சு இல்ல அதான் மறந்துட்டார் போலும் !

பெயரில்லா சொன்னது…

//இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?//

ஏம்பா... லூசாப்பா நீ... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம மனோகரா வசனம் பேசிக்கின்னு இக்கிறியே ....